சமையல் கலையில் அசத்தும் சனா!
Posted on 10/04/2017
சமையல் செய்வது என்பது தனித்துவமான ஒரு கலை. அதிலும் நம்முடைய தென்தமிழகத்தினர் அதிகமாக உணவிற்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். எனினும் இன்று ஹோட்டல்களில் கிடைக்கும் உணவுகள் ஆரோக்கியமானதாக உள்ளதா என்கிற ஒரு கேள்வி எழும்புகிறது. இதனால் இன்றைய குடும்பத்தலைவிகள் புதுயுக்தியை கையாளத்தொடங்கியுள்ளார்கள். அதுதான் சமையல் வகுப்புகள்.
எதாவது ஒரு உணவை வித்தியாசமாக செய்து அசத்தி குடும்பத்தினரின் பாராட்டுதலை பெற்றுவிடமாட்டோமா என்கிற ஒரு எண்ணத்தோடு களமிறங்கியுள்ளார்கள். தற்போது இதுபோன்ற வகுப்புகளை மதுரை கோமதிபுரம் பகுதியில் அசத்தலாக நடத்தி வருகிறார் திருமதி சனாஸ்ரீ. இந்த கோடை விடுமுறையில் அவர்களின் வகுப்புகள் பற்றியும் அவர்களின் சமையல் ஆர்வம் பற்றியும் அறிந்துகொள்ள உரையாடினோம்.
‘நம்முடைய மதுரை சாப்பாட்டிற்கு பிரபலம். எனவே, என்னிடம் வகுப்புக்கு வருபவர்கள் அதிகம் கற்றுக்கொள்ள விரும்புவது பேக்கிங், ஐஸ்கிரீம் மேக்கிங், மாக்டெயில் மேக்கிங் போன்ற வகுப்புகளுக்கு அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். அதிலும் அதிகமாக பிளாக் பாரஸ்ட் கேக் மற்றும் பிரேமம் கேக் என்று அழைக்கப்படும் ரெட் வெல்வட் கேக் கற்றுக்கொள்ளதான் மவுசு அதிகம்.
எனக்கு டாக்டர் ஆக வேண்டுமென்பதுதான் சிறுவயதிலிருந்து கனவு. ஆனால், என்னுடைய ஆர்வம் மருத்துவத்தைவிட சமையல் கலையின்மீது கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. இதனால் என்னுடைய பள்ளி பருவத்தின்போதே நான் கோடை விடுமுறையில் சமையல் வகுப்புகளுக்கு செல்வதுண்டு. கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய சமையல் ஆர்வம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இதனால் என்னுடைய வாழ்க்கைப் பயணத்தை முழுவதுமாக சமையல் வகுப்புகளின்மீது திருப்பிவிட்டேன்.
BBA இளங்கலை பட்டப்படிப்பை முடித்து, பெங்களூருவில் சமையல் கலையை முழுக்க முழுக்க தொழிற்சார் முறையாக சுமார் மூன்று ஆண்டுகள் கற்றுக்கொண்டேன். அதனைத் தொடர்ந்து என்னுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஒரு சில உணவுகளை தயார் செய்து கொடுக்க அவர்கள் மூலமாக பலரும் எனக்கு அறிமுகமாகி வகுப்புகள் எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். அப்படித்தான் வகுப்புகளை துவங்கினேன். தற்போது சாக்லேட் மேக்கிங், சைவ, அசைவ உணவு வகை வகுப்புகள், ஐஸ் கிரீம், மாக்டெயில்ஸ் தயாரிப்பு வகுப்புகளை நடத்தி வருகிறேன்.’ என கூறினார்.
Tags: News, Lifestyle, Art and Culture