நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோயை தடுக்கும் காரணி!
Posted on 22/06/2022
இன்றைய தேதியில் உலகம் முழுவதும் 30 கோடி மக்களுக்கும் மேலானவர்கள் சி ஓ பி டி எனப்படும் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த பாதிப்பிற்கு ஒருங்கிணைந்த சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை பெற இயலும் என்றாலும், இதனை வராமல் தடுக்க முக கவசம் அணியலாம் என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
காற்று மாசு, சிகரெட் புகை, தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் நச்சு புகை, துவிச்சக்கர மற்றும் ஏனைய நான்கு சக்கர வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை... ஆகியவற்றின் காரணமாக நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த நோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தி இருக்கிறது. அதிலும் குறிப்பாக 40 வயதை கடந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருவதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது.
இருமல், சளி, மூச்சு திணறல், சளியுடன் கூடிய இருமல் ஆகிய அறிகுறிகளைக் கொண்டிருக்கும் இத்தகைய நோயால் பாதிக்கபட்டவர்கள், உரிய தருணங்களில் மருத்துவர்களை சந்தித்து பரிசோதனைகளை செய்து அவர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு முக்கியமான ஒரு விடயத்தை வலியுறுத்தி கற்பித்திருக்கிறது. நாளாந்தம் எங்கு பயணித்தாலும் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறது. இந்த முக கவசம் அணிவது, கொரோனா தொற்று பாதிப்பிற்கு மட்டுமல்லாமல் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் ஏற்படாமலும் தற்காத்துக்கொள்ளும் காரணி என மருத்துவர்கள் எடுத்துரைத்திருக்கிறார்கள்.
டாக்டர். பழனியப்பன்
தொகுப்பு: அனுஷா
Tags: News