நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றி
Posted on 07/06/2022
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றார்.
இங்கிலாந்து பிரதமராக 2019 ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவியேற்றார். 2020ல் கொரோனா முதல் அலையின் போது ஊரடங்கு சட்டத்தை மீறி மே மாதம், லண்டனின் பிரதமரின் அலுவலக இல்லத்தில் 100-க்கும் மேற்பட்டோரை அழைத்து போரிஸ் ஜான்சன் விருந்து நிகழ்ச்சி நடத்தினர். இதற்கு கண்டனம் எழுந்ததால், தவறுக்கு போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கோரினார். இந்நிலையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் 2021 ஏப்ரலில் காலமானார்.
அவரது இறுதி சடங்கின் போது பிரதமர் அலுவலக நிர்வாகிகள் மது விருந்து நடத்தியது பேசும் பொருளானது. இதனால் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். இதுகுறித்து லண்டன் மெட்ரோபொலிட்டன் போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பித்தனர். இந்த இரு விவகாரங்களை முன் வைத்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக சொந்த கட்சியினரே பதவி விலகும்படி வலியுறுத்தி வந்ததால் பிரதமர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இவருக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எம்.பி.க்கள் கன்சர்வேடிவ் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து போரிஸ் ஜான்சன் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 359 எம்.பி.க்களில் போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாக 211 எம்.பி.க்களும், எதிராக 148 எம்.பி.க்களும் வாக்களித்தனர். இதையடுத்து, அவர் வெற்றி பெற்றார்.
Tags: News